Archives: ஆகஸ்ட் 2020

வேலையாள் செவிகொடுக்கின்றான்

கம்பியில்லா ரேடியோ தொடர்பு சாதனம் இயங்கும் நிலையில்  இருந்திருந்தால், அவர்கள் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்திருப்பார்கள். மற்றொரு கப்பலில் இருந்த ரேடியோ இயக்குபவர் சிரில் இவான்ஸ் என்பவர், டைட்டானிக் கப்பலின் ரேடியோ இயக்குபவர் ஜாக் பிலிப்ஸ் என்பவருக்கு, அவர்களின் கப்பல் ஒரு பனிப்பாறையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, ஒரு செய்தியை அனுப்பினார். ஆனால் அந்த ரேடியோ இயக்குபவர், பிரயாணிகளின் செய்திகளை அனுப்புவதில் தீவிரமாக இருந்ததால், கோபத்தில் அமைதியாக இருக்குமாறு செய்தி அனுப்பினார். இதனால் வருத்தமடைந்த அந்த ரேடியோ இயக்குபவர் தன்னுடைய ரேடியோ சாதனத்தை மூடி விட்டு தூங்கச் சென்று விட்டார். 10 நிமிடங்கள் கழித்து டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. அவர்களின் துயரக் குரல் பதிலளிக்கப் படாமல்போய் விட்டது, அதனை யாருமே கவனிக்கவில்லை, கேட்கவில்லை.

 இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பரிதானத்துக்கு அடிமைப் பட்டு, தங்களின் ஆவிக்குரிய வாழ்வை இழந்ததையும், தேசம் ஆபத்தை நோக்கி இழுக்கப்படுவதையும் குறித்து 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கின்றோம். “அந்நாட்களில் கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை” (1 சாமு. 3:1) என்பதாகக் காண்கின்றோம். ஆனாலும் தேவன் அவருடைய ஜனங்களைக் கைவிடவில்லை. அவர், கர்த்தருடைய ஆசாரியனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ,சாமுவேல் என்ற ஒரு சிறுவனிடம் பேசுகின்றார். சாமுவேல் என்ற பெயருக்கு “தேவன் செவிகொடுக்கின்றார்” என்று அர்த்தம். அவனுடைய தாயாரின் ஜெபத்திற்கு தேவன் பதிலளித்தார் என்பதின் நினைவாக அப்பெயரிடப் பட்டான். தேவனுக்குச் செவிகொடுக்க சாமுவேல் கற்றுக் கொள்ள வேண்டும்.

“சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” (வ.10). இங்கு வேலையாள் கேட்கிறான். வேதாகமத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் காரியங்களுக்கு செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய வாழ்வை அவருக்கு ஒப்புக் கொடுப்போம். தங்களின் “ரேடியோக்களை” இயங்கும் நிலையில் வைத்திருக்கும்- தாழ்மையுள்ள அடிமையின் ரூபத்தை நாம் தரித்துக் கொள்வோம்.

தற்பரிசோதனை

சமீபத்தில், இரண்டாம் உலகப் போரின் போது, என்னுடைய   தந்தை என்னுடைய தாயாருக்கு அனுப்பி வைத்த கடிதங்களைப்  படித்தேன். அவர் வட ஆப்ரிக்காவில் இருந்தார், என் தாயார் அமெரிக்காவில் இருந்தார். என்னுடைய தந்தை, அமெரிக்க இராணுவத்தில் இளம் நிலை அதிகாரியாக இருந்தார், இராணுவ வீரர்களின் கடிதங்களை தணிக்கை செய்யும் பொறுப்பைப்    பெற்றிருந்தார். மிக முக்கியமான செய்திகள் எதிரிகளைச் சேராதபடி காப்பதற்காக இதனைச் செய்தார். அக்கடிதங்களைப் பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாகவே இருந்தது.  தன் மனைவிக்கு எழுதிய அக்கடிதத்தின் வெளிப்பக்கத்தில், “இரண்டாம் நிலை அதிகாரி ஜாண் பிரானன் (என்னுடைய தந்தையின் பெயர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்டது” என்று முத்திரையிடப்பட்டிருந்தது. தன்னுடைய  சொந்த கடிதத்திலேயே சில வரிகளை அடித்திருந்தார்!

சுய தணிக்கை என்பது, நம் அனைவருக்குமே நன்மையானது. வேதாகமத்தில் அநேக இடங்களில் அதை எழுதியவர்கள், நம்மிடத்தில் சரியில்லாதவை எவை, தேவனுக்கு மகிமையைத் தராதவை எவை என நம்மை நாமே சோதிப்பதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றனர். சங்கீதக்காரன், “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும் ……..வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்” (சங்.139:23-24) என்கின்றான். எரேமியா அதனை இவ்வாறு கூறுகின்றார். “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து, ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவோம்” (புல.3:40) என்கின்றார். திரு விருந்தில் பங்கேற்கும் முன்பு, “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்” (1 கொரி.11:28) என்று பவுல் நம்முடைய இருதயத்தைக் குறித்துக் கூறுகின்றார்.

தேவனுக்குப் பிரியமில்லாத எந்தச் செயலையும், எந்த மனப்பான்மையையும் விட்டு திரும்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் உதவிசெய்வார். எனவே நாம் இந்த உலகத்தினுள் நுழைவதற்கு முன்பாக, நாம் நின்று ஆவியானவரின் உதவியோடு சுய சோதனை செய்வோம், அதன் மூலம் நாம் அவரோடு ஐக்கியமாகும்படி, “தேவனிடம் திரும்புவோம்”.

மிகச் சிறந்த அலை

“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர்.  உலகெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.

முதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).

இயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம்! நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.

தேவன் நம்மை விடுவிப்பவர்

சைக்கிள், ஓட்டம், நீச்சல் ஆகிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கிய  (டிரையத்லான்) போட்டியில் கலந்து கொள்பவர்களில், பயந்து விடும் நீச்சல் வீரர்களை காப்பாற்றும்படி, மீட்பவர் ஒருவர் கடற்பரப்பில் தன்னுடைய படகில் தயாராக இருந்தாள். “படகின் மையப்பகுதியை பற்றிப் பிடிக்காதீர்கள்!” என்று நீச்சல் வீரர்களிடம் கத்தினாள், ஏனெனில் அத்தகைய ஒரு காரியம் அவளுடைய படகையும் கவிழ்த்திவிடும் என்பதை அவள் அறிந்திருந்தாள். ஆனால், அந்த சோர்வடைந்த வீரர்களை முன்பக்கதிற்கு, அல்லது துடுப்பின் அருகில் வருமாறு வழிகாட்டினாள். அங்கே அவர்கள் ஒரு வளையத்தைப் பற்றிக் கொள்ள முடியும், அவர்களை மீட்பவரும் உதவுவதற்கு வசதியாக இருக்கும்.

எப்பொழுதெல்லாம் வாழ்வு அல்லது மக்கள் நம்மை கீழே இழுத்துவிடும் அச்சுறுத்தல் கொடுக்கும் போது, இயேசுவின் விசுவாசிகளாகிய நமக்கு மீட்பர் ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்ளுவோம். “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்………………… அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணுவேன்” (எசே.34:11-12) என்கின்றார்.

சிறைப் பட்டுப் போன தேவனுடைய ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசி தரும் உறுதிப்பாடு இதுவே. அவர்களுடைய தலைவர்கள் அவர்களைத் தள்ளி, ஏமாற்றினார்கள், அவர்களுடைய வாழ்க்கையை கொள்ளையிட்டு, மேய்ப்பர்கள் (தேவனுடைய) மந்தையை மேய்க்காமல், “தங்களையே மேய்த்தார்கள்” (வ.8). அதன் விளைவாக,  “பூமியின் மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை” என்று தன்னுடைய ஜனங்களைக் குறித்து தேவன் கூறுகின்றார் (வ.6).

“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (வ.15), அவருடைய இந்த வாக்கு இன்றைக்கும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன? சர்வ வல்ல தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். “நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்” (வ.11) என்பதாக அவர் கூறுகின்றார். இதுவே ஊறுதியாகப் பற்றிக் கொள்ளத் தகுந்த மீட்பளிக்கும் வாக்கு.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.